காலிங்கராயன் தினத்தையொட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் காலிங்கராயன் மணிமண்டபத்தில் திருவுருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்

ஈரோடு : ஈரோடு ஊராட்சி ஒன்றியம், மேட்டுநாசுவம்பாளையம் ஊராட்சியில் அமைந்துள்ள காலிங்கராயன் மணிமண்டபத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா அவர்கள் திரு.காலிங்கராயன் தினத்தையொட்டி, தமிழ்நாடு அரசு, செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில், அன்னரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.ஈரோடு மாவட்டம், வெள்ளோடு கனகபுரத்தில் பிறந்த காலிங்கராயன் அவர்கள் பவானி ஆற்றின் குறுக்கே காலிங்கராயன்பாளையத்திலிருந்து ஆவுடையார்பாறை வரை சுமார் ஏறத்தாழ 57 கிலோமீட்டர் நீளத்திற்கு தடுப்பணை கட்டி கி.பி. 1282-ம் ஆண்டு தை-5ம் நாள் தான் உருவாக்கிய அணைக்கட்டையும், வாய்க்காலையும் உலகுக்கு அர்பணித்ததால் அந்த நாள் (தை 5) காலிங்கராயன் தினமாக கொண்டாடப்படுகிறது. பவானி, நொய்யல், அமராவதி ஆகிய ஆறுகளை தான் வெட்டிய கால்வாயின் மூலம் இணைக்க காலிங்கராயன் அவர்கள் முற்பட்டார். பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே நதி நீர் இணைப்பிற்கு வித்திட்டவர் காலிங்கராயன் அவர்கள். இவர் நினைவாக ஈரோட்டில் காலிங்கராயன் விருந்தினர் மாளிகை பொதுப்பணித்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது.திரு.காலிங்கராயன் அவர்களுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் ஈரோடு மாவட்டம், காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் காலிங்கராயருக்கு மணிமண்டபம் திறந்து வைக்கப்பட்டது. மேலும், காலிங்கராயன் அவர்களால் அமைக்கப்பட்ட காலிங்கராயன் அணைக்கட்டு பகுதியில் உள்ள காலிங்கராயன் மணிமண்டபத்தில் அன்னாரது திருவுருவச்சிலைக்கு ஆண்டு தோறும் தை 5-ம் நாள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அன்னாரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சியில், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.சுகுமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் திரு.உதயகுமார் (நீர்வள ஆதாரத்துறை) உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள், காலிங்கராயன் அவர்களின் வாரிசுதாரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.