செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் சிறப்பு முகாம்: வேளாண் இணை இயக்குநர் தகவல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் சிறப்பு முகாம் நடக்கவுள்ளதாக இணை இயக்குநர் தெரிவித்துள்ளார். இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட வேளாண் இணை இயக்குநர் அசோக் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு 2023-24ம் ஆண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வேளாண்மை – உழவர் நலத்துறை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை, கூட்டுறவு துறை, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, பால்வளத்துறை, கால்நடை துறை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, ஊரக வளர்ச்சிதுறை, நீர்வள ஆதாரத்துறை, தமிழ்நாடு காதி மற்றும் கிராமப்புற தொழிற் கழகம் மற்றும் மின்சாரத்துறை ஆகிய துறைகள் இணைந்து கிராம பஞ்சாயத்துகளை தன்னிறைவு பெற்ற கிராம பஞ்சாயத்துகளாக மாற்றிட அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடர்பாக இன்று (28ம் தேதி), 73 கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது. இம்முகாம்களில், பட்டா மாறுதல், நுண்ணீர் பாசனம் அமைக்க விண்ணப்பம் பெறுதல், சிறு, குறு விவசாயி சான்று வழங்குதல், விவசாய கடன் அட்டை வழங்குதல், பயிர்காப்பீடு திட்ட விழிப்புணர்வு, வேளாண் துறை தோட்டக்கலை மற்றும் வேளாண் பொறியியல் துறை சார்ந்த திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளன. மேலும், கால்நடைகளுக்கான சிறப்பு நோய் தடுப்பு முகாம்களும் இன்று நடைபெறவுள்ளது. எனவே, விவசாயிகள் அனைவரும் இம்முகாம்களில் தவறாது கலந்துக்கொண்டு அனைத்துதுறை திட்டங்களின் பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.