தொடர் விடுமுறை: கன்னியாகுமரியில் 34,000 பேர் கடலில் படகுப் பயணம்

LOGI 1 year ago

நாகர்கோவில்: ஆயுதபூஜை, விஜயதசமி தொடர் விடுமுறையை முன்னிட்டு கன்னியாகுமரியில் 34,000 சுற்றுலா பயணிகள் கடலில் படகு பயணம் மேற்கொண்டு விவேகானந்தர் பாறைக்கு சென்று வந்தனர்.ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு முந்தைய தினமான சனி, ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்தது. இதனால் சுற்றுலா திட்டங்களை வகுத்து குழந்தைகளுடன் பல்லாயிரக்கணக்கானோர் கன்னியாகுமரியில் குவிந்தனர். தமிழகம், கேரளா மட்டுமின்றி பிற மாநிலங்களை சேர்ந்தோரும் ஏராளமானோர் சுற்றுலா வந்திருந்தனர். வடமாநிலங்களில் தசரா விடுமுறை என்பதால் கன்னியாகுமரி, மற்றும் சுற்றுலா மையங்களில் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரி முக்கடலும் சங்கமத்தில் இன்று அதிகாலையில் இருந்தே சூரியன் உதயமாகும் காட்சியை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து இருந்தனர்.இதேபோல் முக்கடல் சங்கமத்தில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். கன்னியாகுமரி விவேகானந்தர் நினைவு மண்டபத்தை பார்வையிட இன்று காலை 7 மணியில் இருந்தே சுற்றுலா பயணிகள் படகுத்துறையில் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இன்று இடையூறின்றி படகு சென்றதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.மேலும் கன்னியாகுமரியில் காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவு பூங்கா, சூரிய அஸ்தமன மையம்,கடற்கரை சாலை, அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், விவேகானந்தா கேந்திராவில் உள்ள பாரதமாதா கோயில், ராமாயண கண்காட்சி கூடம், சுற்றுச்சூழல் பூங்கா, வட்டக்கோட்டை பீச் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதைப்போலவே திற்பரப்பு அருவி, மாத்தூர் தொட்டிப்பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, வட்டக்கோட்டையிலும் கூட்டம் அலைமோதியது. கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை ஆயுத பூஜை தொடர் விடுமுறையான 4 நாட்களில் மட்டும் 34 ஆயிரத்து 175 சுற்றுலா பயணிகள் கடல் நடுவே படகு பயணம் மேற்கொண்டு விவேகானந்தர் பாறையை பார்வையிட்டுள்ளனர்.கடந்த 21-ம் தேதி 8 ஆயிரத்து 100 பேரும், 22-ம் தேதி 9ஆயிரத்து 925 பேரும், ஆயுத பூஜை தினமான 23-ம் தேதி 10ஆயிரத்து 100 பேரும், விஜயதசமியன்று 6 ஆயிரத்து 50 பேரும், விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்வையிட்டு உள்ளனர். இந்நாட்களில் வட்ட கோட்டைக்கு 4 ஆயிரம் சுற்றுலா பயணிகள் சொகுசு படகுகளில் சவாரிசெய்து உள்ளனர். தசரா விடுமுறையால் கன்னியாகுமரியில் வடமாநில சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது.


செய்திகள் தொடர்பான செய்திகள்

அண்மைய செய்திகள்